April 23, 2015

நாரதர் சாபம்!


           புருஷோத்தமன், ஸ்ரீமன் நாராயணன், தன் அன்பர்களான ஜெய மற்றும் விஜயனின் சாபத்தை நிறைவேற்றுவதற்கான சரியான நேரத்தினை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருந்தார். பரசுராம அவதாரம் முடிந்து இளைப்பாரிக் கொண்டிருந்தவருக்கு எப்பவும் தேவர்கள் வந்து கூறி,பின் அவதாரம் எடுக்க மனமில்லை. இம்முறை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு,எவ்வாறு ஆரம்பிக்கலாம் என்று தன் சயனத்தில் யோசித்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. "சரி,எண்ணத்தினை நிறைவேற்ற சரியானவன் யார்?" என்று ஆராய்ந்து கொண்டிருந்த லீலைகளின் மன்னனுக்கு சிந்தையில் தோன்றிய உருவத்தினைக் கண்டதும் சொல்லில் அடங்கா சந்தோஷம்! "இவனே சரியானவன்! இவன் கொண்டே ஆரம்பித்துவிடலாம்!" என்று புன்னகைத்துக் கொண்டார் நமது மாதவன்.
                            
                                                  *                 *                 *                 *               *
          சிவபெருமானுடன் உலகை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த  நாரதர் திடீரென தவத்தில் அமர்ந்தது இதனால்தான்!


          நாரதருக்கு சில நாட்களாகவே மனதில் சிறு உறுத்தல். பிருகு முனிவரோ, முனிவர் தகூரோ , முனிவர் வசிஷ்டரோ வந்தால் தேவலோகம் கொடுக்கும் மரியாதை ஏன் தனக்கு மட்டும் கிடைக்க மாட்டேங்கின்றது? இந்திரன் கூட முனிவர் வசிஷ்டர் வந்தால் பயம் கலந்த மரியாதையுடன் அரியணை விட்டு இறங்கி வந்து வரவேற்கிறான். ஆனால் நான் சென்றால் இருந்த இடத்தை விட்டு கூட நகர்வதில்லை. அவனுக்கு ஏதும் காரியம் ஆகவேண்டும் என்றால் மட்டுமே என்னை தேடி வருகிறான்! அவர்களும் முனிவர்கள் தான். கடும் தவம் புரிந்து அனைத்தையும் வென்றவர்கள்! முற்றும் துறந்தவர்கள். அவ்வளவு தானே! என்றது நாரதரின் மனம். இதை விஷ்ணுவிடமோ சிவபெருமானிடமோ வினவ கூட எண்ணினார். ஆனால், ஏதும் சாக்கு  சொல்லி தள்ளிவைத்து விடுவார்களோ என்ற பயத்தால் கேட்காமல் இருந்தார்.

           சிவபெருமானுடன் இன்று உலகை சுற்றி வரும் போது சிவனும் எதேச்சையாக (?!?) ஒரு தபோவனத்திற்கு கூட்டிச் சென்று, "நாரதா! இத்தபோவனம் மிகவும் சக்தி வாய்ந்தது. இங்கு தவமிருப்பவர் யாராயினும் அவரின் தவத்தை எந்த சக்தியாலும் கலைக்க முடியாது என்ற வரத்தை நானே வழங்கியுள்ளேன்! இங்கு தவமிருந்த முனிவர்கள் பலர் காமதேவனையும்  வென்று தவ ஞானிகளாகி உள்ளனர். ", என்று கூற, நாரதருக்கும் தன் மனதின் நெருடல் நினைவிற்கு வர,"ஆஹா!நானும் இங்கு தவமிருந்து மன்மதனை வீழ்த்தி விட்டால், அனைவரும் என்னையும் மதிப்பர் அல்லவா!" என்று எண்ணினார். அவ்வளவுதான். தியானத்தில் அமர்ந்தார். நடப்பதை அறிந்த சிவபெருமானும் புன்னகைத்துக் கொண்டு, தான் வந்த வேலை முடிந்ததை அறிந்து கைலாயம் திரும்பினார்.

            நாரதரின் கடுந்தவம் வழக்கம்போல் இந்திரனை கலங்க வைத்தது. அனைத்து தேவர்களும் இந்திரலோகத்தில் கூடினர். "திடீரென எதற்கு நாரதர் இப்படி கடுந்தவம் புரிகிறார்? இதனால் நமக்கு ஏதும்  பிரச்சனை வந்து விடுமோ?", பயத்துடன் இந்திரன் வினவ, "நமக்கு என்று பெரிதாய் ஒன்றும் வராது. வந்தால் உமக்குத்  தான் வரும். நாரதர் தேவலோகத்திற்கு அதிபதியாகும் எண்ணம் கொண்டாரோ என்னவோ!?" - வாயு தேவன் தன் எண்ணக்கனைகளை காற்றில்  கலக்கவிட்டார். 

         "இந்திரன் பதவி மட்டுமா? நாரதர், ஸ்ரீமன் நாராயணனின் விருப்பமிக்க பக்தன். நாரதர் கேட்டால் அந்த நாராயணன் மட்டுமல்ல,சிவபெருமானும் எதையும் வழங்கிவிடுவார். நாராயணன் தன் பதவியைக் கூட வழங்கிவிடுவார்!", என்று சூர்யதேவனும் சிறு அனலை வீச, அவ்வளவுதான், இந்திரனுக்கு வேர்த்தே விட்டது!!! 

          "ஏன் எல்லோரும் என் பதவிக்கே ஆசைப் படுகிறார்கள்?", என்று முணுமுணுத்த இந்திரன் வருணதேவனை உடனே அழைத்தான். "வருணா! உடனே சென்று எப்பாடு பட்டாவது நாரதரின் தவத்தினை கலைக்கவேண்டும். வாயுதேவனையும் கூட அழைத்துச் செல்லுங்கள்", என்று ஆணையிட, வருணதேவனும் வாயுதேவனும்  தங்களின் பலத்தினை நாரதருக்கு காட்டச் சென்றனர்.

          சிவபெருமானின் வரம்! நாரதரின் தவத்தினை கலைக்க முயன்று வருணதேவனும் வாயுதேவனும் தோற்றுப்போக, இந்திரன் அக்னிதேவனையும் சூர்யதேவனையும் அனுப்பி வைத்தான். அக்னிதேவனும் சூர்யதேவனும் இணைந்து தங்களின் சக்தியினை நாரதரிடம் காட்டியும் கூட  தோற்றுப் போயினர் . இந்திரன் தன்  இறுதி அஸ்திரமான மன்மதனை ரதி,ரம்பை,ஊர்வசி மற்றும் இதர தேவலோக தேவதைகள் அனைவரையும் அழைத்துச் சென்று நாரதரின் தவத்தினை கலைக்க உத்தரவிட்டான். இந்திரலோகமே வெறிச்சோடி  இருக்க, இந்திரன் மட்டும் தனிமையில் பயத்துடன் அமர்ந்து தபோவனத்தில்  நடப்பவற்றை  கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். மீண்டும் தாம் இவ்வரியணையில் அமரப்போவதில்லையோ என்று கூட உள்ளுக்குள் நடுங்கினான்.

         தபோவனத்தில் நாரதரின் தவத்தினை கலைக்க மன்மதன் தொடுத்த அனைத்து அம்புகளும் பலனளிக்காமல் போயின. இதமான காற்றில் மலர்களின் தேன்நிறைந்த மணங்கள் கலந்து வனமெங்கும் வீச,  ரம்பை, ஊர்வசி, மேனகை,ரதி என அனைவரும் தோழியருடன் பூமாதேவிக்கு வலிக்காமல் மெல்லிய பாதங்கொண்டு ஆட , மன்மதனும் தன் வலிமையான  அஸ்திரமான காமபானத்தினை  நாரதரினை நோக்கி தொடுத்தார் . அந்தோ பரிதாபம்! நாரதரின் முன் அப்பானம் சாம்பலாகிப்போனது. அதைக்  கண்ட இந்திரன், நாரதருக்குள் இப்படி ஒரு பலமா என்று விக்கித்துப்போய் ஐராவதத்தையும் மறந்து வனத்திற்கு ஓடோடி வந்தான். மன்மதன் குனிந்த தலையுடன் இந்திரனை நோக்கி,"தேவா! நாரதரின் தவத்தினை என்னால் கூட கலைக்க இயலவில்லை. நாரதரின் தவ வலிமை முன் என் அஸ்திரங்கள் அனைத்தும் செயலற்றுப் போயின.  நான் தோற்றுவிட்டேன்." என்றார். 

         மன்மதனின் வார்த்தைகள் உதிர்ந்த  நொடி,"நான் மன்மதனை வென்றுவிட்டேன்!" என்று ஆனந்த கூச்சலுடன் நாரதர்  தவத்தில் இருந்து கலைந்தார். 
      
     அனைவரும் பிரமித்து நிற்க, நாரதரோ,"மன்மதா! நான் உன்னை வென்றுவிட்டேன் என்று நீயே கூறிவிட்டாய். நான் முற்றும் துறந்தவன் இனி. தேவர்கள் அனைவரையும் வென்றுவிட்டேன். மன்மதனை வென்றேன்...நான் இனி சிவபெருமானுக்கு இணை. இதை சிவபெருமானிடமே முதலில் கூறவேண்டும்." ஆனந்தமாக வனத்தினை விட்டு கைலாயம் விரைந்தார்.

          கைலாயத்தில் சிவபெருமானுடன் உரையாடலில் இருந்த பார்வதி தேவியின் கவனத்தினை நாரதரின் குரல் கலைத்தது. "வருவது நாரதரா!? பார்த்து எத்தனை நாட்கள் ஆயிற்று!",என்று தேவி பரிவுடன் வினவ,"ஆம் தேவி!நாரதரே தான்! தவம் முடிந்து நேராக கைலாயம் வந்திருக்கிறார்!", என்றவாறு சிவபெருமானே எழுந்து சென்று நாரதரை வரவேற்றார்! "வரவேண்டும் நாரதா! உன் முகத்தில் தேஜசை காண்கிறேன்! மிகவும் ஆனந்தமாய் உள்ளாய்! உடன் வந்த என்னையும் மறந்து தியானத்தில் அமர்ந்தாயே, உன் எண்ணம் கை கூடியதா?", என்று சிவபெருமான் வினவ,"எம்பெருமானே!  என் தவவலிமையினால் நான் மன்மதனை, அந்த நாராயணன் மைந்தனை வென்று விட்டேன்! என் தவவலிமை கண்டு மன்மதன் மட்டுமல்ல, அனைத்து தேவர்களும் நடுங்கிவிட்டனர். இந்திரன் உட்பட!", என்று ஆனந்த நடனம் ஆடினார்.

              "மிக்க மகிழ்ச்சி நாரதா! ஆனால், இக்கூற்றை நாராயணனிடம் கூறிவிடாதே. நாராயணனை அறிந்ததால் கூறுகிறேன். உன் நலனிற்கு தான் கூறுகிறேன்!", என்றார் எச்சரிக்கையுடன் விஷ்ணு வல்லபாவாகிய சிவபெருமான்.
     
         "பிரபோ! நான் நாராயணனின் சிறந்த பக்தன் அல்லவா! மன்மதனை நான் வென்றதைக் கேட்டால் அவர் நிச்சயம் அகம் மகிழ்வார். என் தவப்பலன், தாங்களே என்னை எழுந்து வந்து வரவேற்றீர்களே!  நான் வைகுண்டம் சென்று உங்களுக்கு உண்மையை உணர்த்துகிறேன்.", என்றவர் தன் வணக்கங்களை சிவபெருமானுக்கும் தேவி பார்வதிக்கும் தெரிவித்துவிட்டு வைகுண்டம் புறப்பட்டார்.
          
     "ஐயனே! தாங்கள் அளித்த வரத்தினால் தான் அத்தபோவனம் சக்தி வாய்ந்ததாக உள்ளது. இதை நாரதரும் அறிவார். பின் எதற்கு 'தன் தவவலிமை' என்று தற்புகழ் பாடுகிறார்? தாங்களும் எழுந்து சென்று வரவேற்றீர்கள்! நாரதருக்கு என்னாயிற்று?", என்று தேவி பார்வதி குழப்பத்துடன் வினவ, புன்னகைத்த சர்வேஸ்வரன், "தேவி!அனைத்தையும் கவனித்த நீ ஒன்றை கவனிக்க மறந்துவிட்டாயே. நாரதர், தபோவனம் விட்டு வந்ததில் இருந்து இக்கணம் வரை எப்பொழுதும் கூறுவதை கூறவில்லையே! எள்ளளவும் கூற எண்ணவுமில்லை! இதில், நான் எச்சரித்தும் கேட்காமல் வைகுண்டம் வேறு செல்கிறார்! நான் அதைப் பற்றியே  எண்ணிக் கொண்டிருக்கிறேன்!",என்றார்.
             
         நீலலோஹிதனின் வார்த்தைகளில் உள்ள அர்த்தங்களை புரிந்துகொண்ட தேவியும் மனம் விட்டு புன்னகைத்தார். "நாரதா! பாவம் நீ! அண்ணன் நாமம் சொல்லி கலகமூட்டி நிம்மதியாய் இருந்தாய்! அண்ணனிடம் தமக்கையாய் இருப்பது எளிது. அவரின் பிரியப்பட்ட பக்தனாய் இருப்பதைக் காட்டிலும்."
             
         வைகுண்டத்தில் தாயாருடன் அமர்ந்திருந்த ஸ்ரீமன் நாராயணன், நாரதர் வருவதைக் கண்டவுடன் தாயைக் கண்ட குழந்தைப் போல் துள்ளி எழுந்து சென்று வரவேற்றார். "வா நாரதா வா! நீ இல்லாமல் வைகுந்தமே கலையில்லாமல் போனது எனக்கு! என்னைக் காணாமல் நீயும் என்னைப் போல் பொழிவிழந்து இருப்பாய் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் நீயோ சூரியனைக் காட்டிலும் பிரகாசமாய் இருக்கின்றாயே!".  கைலாயத்தில் சிவபெருமானும் எழுந்து வந்து வரவேற்றார்! இங்கு நாராயணனும் எழுந்து வந்து வரவேற்கிறார்! எல்லாம் என் தவத்தின் பலன் என்று எண்ணிப் பெருமிதப்பட்டுக் கொண்ட நாரதர், "பிரபோ! நான் தங்களின் மைந்தன் மன்மதனை வென்றுவிட்டேன்",என்று ஆரம்பித்து கைலாயத்தில் பாடிய அதேப் பாடலைப் பாடி ஆடி முடித்தார்.


          "ஆஹா! பார்த்தாயா தேவி! என் பக்தன் நாரதனுக்குள் இப்படியொரு சக்தியா!? மிகவும் ஆனந்தமாய் உள்ளது. பெருமிதம் கொண்டேன் நாரதா!", என்றார் மாதவன். தேவியும்,"நாரதா! உன் தவவலிமையால் மூவுலகிற்கும் நல்லது நடக்கட்டும்!" என்றார். 
    
        "தேவி! நான் இதைப்பற்றி குபேரனிடமும் பிரம்மனிடமும் கூறவேண்டும். விடை கொடுங்கள் தேவி!", என்றவரை நோக்கி,"நாரதா! என்னை மறந்து விட்டு போகின்றாயே!"என்றார் பரமாத்மா, அப்பாவியாக . "மன்னியுங்கள் பிரபோ! பரபரப்பில் இருந்ததால்...விடை கொடுங்கள் பிரபோ! வருகிறேன் தேவி!" என்றவாறு நாரதர் வைகுண்டம் விட்டு புறப்பட்டார்.
         
           "ஐயனே! நாரதர் தங்களின் பெரும்பக்தன் அல்லவா! அவரிடமும் உங்கள் லீலைகளை நடத்த வேண்டுமா?", என்ற தேவியை நோக்கி புருஷோத்தமன், "தேவி! என் பக்தன் இதுவரை என்னை அழைக்கவில்லையே!", என்றார் உரிமையுடன்.

           மூவுலகத்திலும் தன் தவவலிமைப் பற்றி பெரியோர், பிரியப்பட்டோர் என அனைவரிடமும் கூறிய நாரதர், யாரேனும் விடுபட்டுள்ளனரா என்று எண்ணிக்கொண்டு பூலோகத்தினை கடந்து சென்று கொண்டிருந்தார். அழகான பசுமை நிறைந்த வனம் ஒன்றைக் கண்டார். குழந்தையின் அழகிற்கு கண் பட்டுவிடக்கூடாதென்று  கண் மையிட்டதில் அக்குழந்தையின் அழகு இன்னும் கூடுவதுப் போல் மலர்கள் மலர்ந்து நிறைந்து  வனத்தின் அழகை இன்னும் கூட்டியது. வனத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவரின் எண்ணத்தினை ஒரு சிரிப்பொலி கலைத்தது. இல்லையில்லை. ஈர்த்தது!! வனத்தின் அழகினை கூட்டும் வண்ணம் அழகே உருவாய் ஆடிகொண்டிருந்தால் ஸ்ரீமதி! "ஆஹா! என்ன அழகு! அழகோவியமாய் இருக்கின்றாள்! யார்  என்று அருகில் சென்று காணலாம்."-நாரதரின் மனக்கனைகள்.

              ஸ்ரீமதி,மன்னன் ஷீலாநிதியின் மகள். நாரதர் வனத்திற்கு வர, தன் மகளைக் காண வந்த மன்னனும்,நாரதரைக் கண்டு அடையாளங் கண்டுகொண்டார். "நாரத முனிவரா! வரவேண்டும் வரவேண்டும்! தன்யனானேன்!",என்று நாரத முனிவரை வரவேற்று உபசரித்தார். 

        அரண்மனையில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த  நாரதரிடம்,"நாரத முனிவரே! எனது புதல்வி ஸ்ரீமதிக்கு சுயம்வரம் நடக்க உள்ளது. அவளுக்கு எப்படிப்பட்ட மணாளன் அமைவான் என்று கூறுங்களேன். அவளது இல்வாழ்கை எவ்வாறு இருக்குமோ என்று மனது ஐயம் கொண்டுள்ளது.",என்ற மன்னன், தன் புதல்வியை அழைத்து,"ஸ்ரீமதி,நாரதர் அருகில் அமர்வாய். அவர் உன் கைரேகைப் பார்த்து உன் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்று கூறுவார்",என்றார். 

            ஸ்ரீமதியின் செங்காந்தல் அலர்ப் போன்ற  உள்ளங்கையினைப் பார்த்த நாரதர், "மன்னா! கவலை கொள்ள வேண்டாம். உனது மகளை மணப்பவன் மூவுலகிற்கும் தலைவனாகும் தகுதியினை உடையவன். உனது புதல்வியின் மணவாளன் ஈசனின் அன்பினைப் பெற்றவனாக இருப்பான். ஈசனுக்கு இணையான வலிமையினைக் கொண்டவனாக விளங்குவான்.", என்றவர், எதையோ எண்ணியவராய், "மன்னா! உன் புதல்வியின் சுயம்வரத்தினை சந்தோசமாக நடத்து. அவள் மனம் கவரும் மன்னனுடன் அவள் இல்வாழ்கை இனியதாய் அமையும். எனக்கு வேலை ஒன்று உள்ளது. நான் சென்று வருகின்றேன்." என்றபடி மன்னனிடம் விடைப்பெற்று நேரே வைகுண்டம் சென்றார்.

               "வா நாரதா! சமீப காலமாய் உனக்கு என் மேல் உள்ள பற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றது! என்னை அடிக்கடி காண வருகின்றாயே!" - இன்முகத்துடன் லக்ஷ்மிநாராயணன் வரவேற்றார்.

                "பிரபோ! தங்களிடம் உதவி நாடி வந்துள்ளேன். ஷீலாநிதியின் புதல்வி ஸ்ரீமதியினை மணம் புரிந்து கொள்ள விரும்புகிறேன். அவள் அழகு என்னை அவளிடம் ஈர்க்கின்றது. அவளை மணமுடித்துக் கொண்டால் நான் மூவுலகையும் வெல்லும் பலம் கொண்டு ஈசனுக்கு இணையான வலிமை உடையவராய் இருப்பேன். ஸ்ரீமதி என்னை மணக்க வேண்டுமென்றால் சுயம்வரத்தின் போது அவள் எனக்கே மாலையிட வேண்டும். அதற்கு நான் அங்கு வரும் இளவரசர்களைக் காட்டிலும் அழகாகவும் இளமையாகவும் தெரிய வேண்டும். மூவுலகிலும் அழகானவன் ஹரியாகிய தாங்கள் தான். ஆக ஹரியினைக் காட்டிலும்  என்னை அழகாக உருமாற்றி, அழகிய ஆடை ஆபரணங்களை  கொடுத்து அருள வேண்டும்." , என்று நாரதர் தன் மனவிருப்பதினைக் கூறினார்.

            நாரதரின் விருப்பத்தினை முழுவதுமாக அமைதியாய் தலையசைத்து கேட்ட ஸ்ரீ ஹரி நாராயணன்,"நாரதா! நீ மன்மதனை வென்று முற்றும் துறந்தவன் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். நீ என்னவென்றால்...", என்றவாறு நாசுக்காக நாரதரை சீண்டினார்.

           "மாதவா! நான் மன்மதனை வென்றது உண்மை. அனால்,இப்பொழுது ஸ்ரீமதியை மணக்க விருப்பம் கொண்டுள்ளேன். நீங்கள் என்னை அழகாய் உருமாற்றினால் நான் ஸ்ரீமதியினை என் விருப்பம் போல் மணப்பேன்!",என்றார் அப்பாவி நாரதர்.

            "நாரதா! என் விருப்பமிக்க பக்தன் நீ! உன் விருப்பத்தினை நான் நிறைவேற்றுகிறேன். உன்னை ஹரியினைக் காட்டிலும் அழகாய் உருமாற்றி உலகின் உயர்ந்த வகை பட்டினால் ஆன ஆடை அணிவித்து,மூவுலகிலும் கிடப்பதர்க்கரிய இரத்தினங்கள் கொண்டு செய்த ஆபரணங்களை உனக்காக தருகிறேன். சுயம்வரத்திற்கு வந்திருக்கும் பிறதேசத்து மன்னர்களைக் காட்டிலும் நீ தனித்து தெரிவாய்!"

              "மாதவா! உன் கருணையே கருணை. தாங்களும் என்னுடன் வரவேண்டும். யாரும் இல்லாமல் செல்கிறேன். தாங்கள் வந்தால் நான் மிகுந்த ஆனந்தம் கொள்வேன்!", என்ற நாரதரின் அழைப்பை எதிர்பார்க்காத (எதிர்பார்த்த, ஆனால் எதிர்பார்க்காதது போல்!!) ஸ்ரீமன்  நாராயணன், "நான் ஏன் நாரதா? ஏதும் நீ எதிர்ப்பாராதது நடந்து விடப்போகிறது!", என்றார்.

           "விஷ்ணு தேவா! நான் தங்களைக் காட்டிலும் அழகானவன். என்னை விட அங்கு வேறு யார்க்கு ஸ்ரீமதி மாலையிட முடியும்? தாங்கள் என்னுடன் வரவேண்டும். எனக்கு துணைக்கு வேறு யாரும் இல்லை!", என்றார் அழகன் நாரதர். நாரதரின் விருப்பத்திற்கு இணங்கி நாராயணனும் தன் துவாரபாலர்களுடன் சுயம்வரத்திற்கு சென்றார்.

            ஷீலாநிதியின் அரண்மனை. ஸ்ரீமதியின் சுயம்வரம். இளவரசர்களும் பிற தேசத்து மன்னர்களும் சுயம்வரத்திற்கு வந்திருந்தனர். நாரதரும் அமர்ந்திருந்தார். ஸ்ரீமதி அழகே அலங்காரத்துடன் கையில் சுயம்வர மாலையுடன் நடந்து வந்தால். நாரதருக்கு மனதிற்குள் பெருமை. "நிச்சயம் எனக்குத்தான் மாலையிடுவாள்! வந்திருக்கும் இளவரசர்கள் என்னைக் கண்ட பார்வையில் அவர்களின் தோல்வியினைக் கண்டேன்!"

          அனைவரையும்  கடந்து வந்த ஸ்ரீமதி,நாரதரின் முன் நின்றாள். மையிட்ட தன் இரு கருவிழிகள்  நானத்தில் சிவக்க, வெட்கப் புன்னகையுடன் தனது இரு கொடிப்  போன்ற மெல்லிய கைகளில் உள்ள மாலையினை தன் மனம் வென்ற மன்னவனின் கழுத்தில் இட்டாள்.

         நடப்பது  புரியாமல் விக்கித்துப்போய் நின்ற நாரதருக்கு கோபம் மட்டும் தலைக்கு மேல் ஏறியது! பின்னர்! ஸ்ரீமதி மாலையிட்டது மன்மோகனரான புருஷோத்தமனுக்கல்லவா!!!

         "ஸ்ரீமதி! என்ன அநீதி இது? இங்குள்ளவர்களில், ஏன் இந்த நாராயணனைக் காட்டிலும் அழகில்  சிறந்தவன் நான் அல்லவா! நீ எனக்கே மாலையிட்டிருக்க வேண்டும் அல்லவா! எதற்கு நாராயணனுக்கு அணிவித்தாய்?", என்று தனது கோவக்கனைகளை தொடுக்க ஆரம்பித்தார்.

         "என்னது?! தாங்கள் அழகில் சிறந்தவரா!?", என்றவாறு கூறிய ஸ்ரீமதி நாரதரினைக் கண்டு சிரிக்க ஆரம்பித்தாள். கூடியிருந்த அனைவரும் சிரிக்க, நடப்பது புரியாமல் நின்ற நாரதரைக் கண்ட ஸ்ரீமான் விஷ்ணுவின் துவாரபாலகர்கள், "நாரத முனிவரே! தாங்கள் ஏன் இப்படி தற்பெருமையில் மூழ்கியுள்ளீர்கள்? தாங்கள் யார்,எப்படி இருக்கின்றீர் என்பது கூட அறியா வண்ணம் அறியாமையில் மூழ்கியுள்ளீரே!", என்றவர்கள் நாரதரை அறையில் உள்ள நிலைக்கண்ணாடி முன் அழைத்துச் சென்றனர். 

       கண்ணாடியில் தன் பிம்பத்தினைக் கண்ட நாரதர் கடுங்கோவத்துடன், "நாராயணா! என்னை என்ன செய்துள்ளாய் நீ? ஏன் என் முகத்தினை குரங்காய் மாற்றினாய்? உன்னை நாடி வந்தவனை இப்படி ஏமாற்றலாமா நீ??"



      "நாரதா! நீ தான் உன் முகத்தினை ஹரியினைப் போல் அழகாய் மாற்றக் கூறினாய். ஹரி என்றால் குரங்கு என்றோர் அர்த்தமும் உள்ளதல்லவா! நீ எனக்கு இருக்கும் மற்ற நாமங்களைக் கொண்டு கூறியிருந்தால் என்னைத் தான் கூறுகின்றாய் என்று எளிதாய் புரிந்திருக்கும் எனக்கு", என்றார் ஒன்றும் அறியாதவனாய்.

               சற்றும் கோபம் அடங்காத நாரதர்,"நாராயணா! நான் விரும்பியவள் முன் என்னை அவமானப்படுத்தி விட்டாய்!", என்றவர் தன் கமண்டலத்தில் உள்ள நீரினை கையில் எடுத்து,"நாராயணா! எவ்வாறு நான் விரும்பியவள் கிடைக்காமல் தவிக்கின்றேனோ அதேப் போல் நீயும் உன் தேவியை பிரிந்து துயரத்தில் வாடுவாய். காட்டில் குரங்குகளுடன் நட்புறவு கொள்வாய்!  குரங்குகளின் துணைக் கொண்டு தேவியுடன் சேர்வாய். நான் உன்னை சபிக்கின்றேன்.", என்று தன் கோபத்தினைக்  கொட்டி முடித்தார்.
       
       அனைவரும் அதிர்ந்து நிற்க, மாதவனோ,"நாரதா! உன் சாபத்தினை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது துவாரபாலகர்கள் பெற்ற சாபத்தினை நிறைவேற்றவே இவ்வாறு நடந்தேன். மேலும்,ஸ்ரீமதி அலைமகளின் அம்சம் ஆவாள். எனவே அவள் என்னையே சேரவேண்டும். மன்மதனை வென்ற மமதையில் இருந்ததால்  உன்னால் ஸ்ரீமதி அலைமகளின் அம்சம் என்பதை அறிய முடியவில்லை. நான் பூமியில் ராமனாய் அவதரித்து உன் சாபத்தினை நிறைவேற்றுவேன்.", என்று பொறுமையுடன் நடந்தவை நடந்ததற்க்கான காரணத்தை விளக்கினார்.
     
           தன் தவறை உணர்ந்த நாரதர், உண்மை நிலை அறிந்து,"நாராயணா! என்னை மன்னித்துவிடு. தற்புகழ்ச்சி என்னும் அறியாமையில் தொலைந்த என்னை மீட்டு விட்டாய்! உண்மையினை உணர்ந்தேன். இனி என்றும் உன் புகழ் மட்டுமே  பாடுவேன். மணம் புரியும் விருப்பம் கொள்ளேன்!"


          "நாரதா! பிருகு முனிவர் போல் மதிப்பும் மரியாதையும் பெற இன்னொருமுறை தவம் புரியலாமே? மீண்டும் மன்மதனை வென்று  ஈசனுக்கும் எனக்கும் இணையான பதவி உனக்கு கிடைக்க வழி உள்ளது!", என்று நாராயணன் நாரதரை தூண்ட, அதிர்ந்த நாரதர், "புருஷோத்தமா!!  இருப்பதே போதும்! நிம்மதியாக உள்ளேன்! நாராயண!! நாராயண!!"



Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...